நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் ஆர் பி மோரே டாக்டர் பி ஆர் அம்பேத்கர்


                                        நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம்.
                                         டாக்டர் அம்பேத்கர்- ஆர் பி மோரே
       (சமூக- வர்க்கப் போராட்டத்தின் இணைப்புச் சங்கிலி திசைகாட்டி)
                                                ஆங்கிலத்தில்; சத்தியேந்திர மோரே, சுபோத் மோரே
                                                தமிழில்; பேரா. முனைவர் க கணேசன், கொட்டாரம்
       நீல வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என்று தலைப்பிட்டு, மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஆங்கில ஏடான பியூப்பிள்ஸ் டெமாக்ரஸி மார்ச்2003ல் வெளியிடப்பட்ட கட்டுரையை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து படித்தபோது புதிய சிந்தனையைக் கிளறியது. மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கும் தோழர் ராமச்சந்திர பாபாஜி மோரே அவர்களுக்கும் உருவாகி, வளர்ந்து, இறுதிவரை தொடர்ந்த வரலாறு என்பது இருவருக்குமிடையேயான தனிப்பட்ட உறவோ, நட்போ என்று சுருக்கிப் பார்க்க முடியவில்லை.
       இருவரின் ஒட்டுமொத்த சிந்தனை  செயல்பாடுகளை உற்றுநோக்கும் போது,சமூக ஒடுக்குமுறைக்கெதிராகவும்,வர்க்கச் சுரண்டலுக்கெதிராகவும் சிவப்பும் நீலமும் (அம்பேத்கரியமும், மார்க்ஸியமும்) ஒன்றிணைந்து,  போராடினால்தான் உண்மையான முழு விடுதலையை அடையமுடியும் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது. தமிழகத்தில் பிரத்தியேகமாக பெரியாரின் சுயமரியாதை கருப்பையும் இணைத்து களமாடவேண்டும் என்ற சிந்தனையும் மேலோங்குகிறது.
 டாக்டர் அம்பேத்கர் காலத்திற்குப் பிறகும், நடைபெற்ற ஏராளமான தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை, வன்கொடுமை உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றிற்கெதிராக நடந்து வரும் போராட்டத் தன்மைகளையும் அவற்றின் அணிசேர்க்கையையும் உற்றுநோக்கும்போதும் ஆர் பி மோரே மாமேதை டாக்டர் அம்பேத்கர் உறவும் சிந்தனைப் பகிர்வும் எப்போதும் வழிகாட்டுவதாகவே உள்ளது.
         இந்தியா முழுவதும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியும், தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக நலனுக்காகப்  பாடுபட்டுவரும்   தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்துப் போராடும் ஐக்கிய முன்னணி வழிமுறைகளை   ஆய்வு செய்யும்போதும்  மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தோழர் ஆர் பி மோரே இருவருடைய சிந்தனை, தத்துவங்கள் செயல்பாடுகள்தான் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறது என்பதையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. எஸ் எஸ் டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நடத்தப்பட்ட வட மாநிலத்து இயக்கங்களும்,தமிழகத்தில் ஜூல2, 2018ல் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமையில் ஏராளமான அமைப்புகளை இணைத்துக் கொண்டு 50000 பேர் ரெயில் மறியலில் கலந்து கொண்ட செய்தியே சமீபத்திய சாட்சி.
        மாமேதை அம்பேத்கரை மதவெறி அமைப்புகள் அவரின் சிலைக்கு மட்டுமல்ல அண்ணலின் சிந்தனைக்கும் காவிச்சாயம் பூசி ஓடுக்கப்பட்டோரின் ஓட்டு வங்கியில் கைவைக்க முடியுமா என வஞ்சக வலைவீசும் காலத்தில், ,உண்மை தியாக வரலாற்றுக் கட்டுரையை தமிழாக்கம் செய்து வாசகர்களின் சிந்தனைக்கு பணிவுடன் வழங்குகிறேன்.
 __________________________________________________________________________________________________     
    
      மார்ச் 19-20, 2003 இந்திய சமூக நீதிக்கான வீர வரலாற்றுத் தடத்தில் 75ஆவது ஆண்டு நிறைவுற்ற தேதிகள் அவை. மகாராஷ்டிரத்தில் கொங்கன் மண்டலத்தில் ராய்காட் மாவட்டத்தில் மகத் எனும் ஊரில், ஆயிரக்கணக்கான தலித் மக்களின் பங்கேற்போடு முதன் முதலாக பொதுக்குளமாகிய சவுதார் குளத்தில் நீரை அள்ளிக் குடித்த போராட்ட நாட்கள்தான் அவைகள்.
          பல நூற்றாண்டுகளாக பொதுக்குளமாக இருந்த போதிலும், எழுதப் படாத விதியாக சாதி இந்துக்கள் மட்டும் பயன்படுத்திவந்த குளத்தில்,ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி சாதி இந்துக்களின் சனாதனப் பண்பாட்டில் உடைப்பை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்டோரை தலை நிமிரச் செய்த வரலாறு சிறப்பு மிக்கதுதானே!.
         அதே ஆண்டு மகத்தில் இரண்டாவது முறையாக 1927ல் டிசம்பர் 25,26,தேதிகளில் ஆயிரக்கணக்கான தலித் மக்களை ஒருங்கிணைத்து, வெறுக்கத்தக்க பழைமையான பிராமணிய சமூகப் பாகுபாட்டை உருவாக்கிய, பாலின ஒடுக்குமுறையை அங்கீகரித்த மனுஸ்மிருதியை பொது இடத்தில் தீயிட்டுக் கொளுத்திய உத்வேக வரலாறும் நிகழ்ந்தது. இந்த இரு வீரஞ்செரிந்த போராட்டங்களிலும் தலைமைப் பாத்திரம் வகித்த டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இந்திய சமூக நீதிக்கான போராட்டத்தின் தளபதியாக ஜொலித்தார்.
தலித் இயக்கத்திற்கும் பொதுவுடைமை இயக்கத்திற்குமான இணைப்பு   
      மேற்குறிப்பிட்ட போராட்டங்களில் பிரதானமான ஒருங்கிணைப்பாளராக விளங்கியவர் ராமச்சந்திர பாபாஜிமோரே. இவர் அம்பேத்கரின் இறுதி நாளான டிசம்பர் 6, 1956 வரை அவரது நெருக்கமான நம்பிக்கைக்குரிய தோழர்களில் இவரும் ஒருவர்.ஆர் பி மோரே மார்க்ஸிய லெனினியத்தால் ஈர்க்கப்பட்டு, 1930ல் பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு நாற்பது ஆண்டுகளாக நிலையாக தன்னலமற்று தன் வாழ்நாள் முழுவதும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தவர். மார்ச் 1, 1903ல் தாழ்த்தப்பட்ட சாதியான மகர் இனத்தில் மகத் தாலுகாவில் லடவ்லி கிராமத்தில் பிறந்தவர்( (2003 தோழர் ஆர் பி மோரே பிறந்த நூறாவது பிறந்த புகழ்சூட்டும் ஆண்டும்தான்}.
    கம்யூனிஸ்ட் கட்சியில இணைந்த பிறகு விடுதலைப் போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு மும்பை நகரில் உழைக்கும் வர்க்க இயக்கங்களிலும், ரெய்காட் மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டங்களிலும் பங்கேற்றதோடு தீண்டாமைக்கெதிரான, சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களிலும் கவனத்தைச் செலுத்தினார்.. பொதுவுடைமை இயக்கங்களுக்கும், தலித் இயக்கங்களுக்கும் பெருமைமிக்க இணைப்புப்பாலமாக செயல்பட்டு வந்தார். உண்மையில் நீலவானில் ஒரு சிவப்பு நட்சத்திரமாக விளங்கினார். அவர் ஒரு சக்திமிக்க எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும் திகழ்ந்து பல முற்போக்கு இதழ்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட இதழ்களில் ஒன்றை ஆங்கில அரசு தடைசெய்யும் அளவு வீரியமிக்கதாக இருந்தது. மகாராஷ்டிர மாநில மார்க்ஸிஸ்ட் அரசியல் ஏடான ஜீவன்மார்க் கின் முதல் ஆசிரியராகப்  பொறுப்பேற்று முதன்முதலாக 1965ல் வெளியிட்டது மிக சிறப்பான வரலாற்றின் நினைவாக அமைந்திருக்கிறது.
ஆரம்பகால தீண்டாமைக்கெதிரான போராட்டத்தில்
      ஆர் பி மோரே தனது இளமைக் கால வாழ்க்கையில் தீண்டாமைக் களங்கத்தை அனுபவிக்க நேர்ந்தது. குழந்தைப் பருவத்தில் மகத் தாலுகாவில் டாஸ்கோயன் எனும் கிராமத்தில் தலித் குழந்தைகளுக்கென தனியாக தொடங்கப்பட்ட பள்ளியில் சேர்ந்து, மிகச்சிறந்த புத்திசாலி மாணவராகத் திகழ்ந்து உதவித்தொகையை வென்று ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார். ஆனால் அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் மகத் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க மறுக்கப்பட்டார். தீண்டாமைக்கெதிரான போராட்டம் அந்த இளம் பதினோரு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.
     சில சமூகச் சீர்திருத்தவாதிகளின் துணையுடன் ஆங்கிலேய அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் இந்த அநீதிக்கெதிராக புகார் மனு அனுப்பிவிட்டு, அதன் நகலை பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தார். பத்திரிக்கையில் பிரசுரமானதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க முன்வர நிர்பந்தமானது. மகத் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.இந்த சமூக அநீதிக்கெதிராக அடைந்த முதல்வெற்றி மாவட்டம் முழுவதும் காட்டூத்தீ போல் பரவி ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடையே ஒரு உத்வேக நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியது.
      அவரின் மாணவப் பருவத்திலிருந்து அவர் வாழ்ந்த பகுதி முழுவதும் மக்கள் சந்தித்த சமூகப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை அநீதிக்கெதிராக போராடத் துவங்கினார். தலித் மக்கள் சந்தித்த சமூக அநீதிக்கெதிராக அரசு அதிகாரிகளுக்குப் புகார் மனு அனுப்புவதோடு, பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்பு காட்டினார்.    
      அந்தக் காலத்தில் கிராமத்திலிருந்து மகத் தாலுகா நகரங்களுக்கும் தலித் மக்கள் அரசு பேருந்துகளில் சாதி இந்து மக்களோடு இணைந்து பயணம் செய்ய முடியாத அவலம் இருந்தது. பொது இடங்களில் காய்கறிகளையும், மீன்களையும் தலித் மக்கள் விற்பனை செய்யத் தடை இருந்தது. ஆர் பி மோரே இந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகப் போராடி வெற்றியும் கண்டார்.
       ஆர் பி மோரே மகத் நகரில் தலித் மக்களுக்கென்றே சிறிய உணவு விடுதியைத் துவக்கினார். அந்த உணவு விடுதி ஓய்வுபெற்ற தலித் இராணுவ வீரர்களும், தலித் இயக்கவாதிகளும் தொடர்ச்சியாகச் சந்தித்து விவாதிக்கும் பாசறையாக உருவானது. மகத் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது அப்போராட்டத்தை உத்வேகப் படுத்தும் மையமாகவும் அந்த உணவு விடுதி அமைந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சத்தியாகிரகம்
    சமூகச் சீர்திருத்தவாதியான சி கே போலே வின் தொடர்ச்சியான முயற்சியால் 1923ல் மும்பை மாகாண சட்டமன்றத்தில் தலித் மக்களின் பயன்பாட்டுக்காக பொதுக் குளங்கள், தர்மசாலைகள், கிணறுகள்,பிற பொது இடங்களிலும் தடுக்காமல் திறந்து விடவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சாதி இந்துக்கள் அந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்த மறுத்தனர். இந்தச் சூழலில் 1926 டிசம்பர்  4 அன்று ஆர் பி மோரே கிராமங்களில் தலித் மக்களை ஒன்றுதிரட்டி தனது டாஸ்கோயின் கிராமத்தில் அமைந்திருந்த க்ராபோர்டு பொதுக்குளத்தில் இறங்கி நீர் அருந்தும் இயக்கத்தை நடத்தினார். இந்தச் செயலானது ரெய்காட் மாவட்டம் முழுவதும் வாழ்ந்த தலித் மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியது. அதே 1926 ஆம் ஆண்டில் ஆர் பி மோரே பொதுச்செயலாளராகவும், பிகாஜி கெய்கவாட் தலைவராகவும் பொறுப்பேற்ற கோகனஸ்தா மகர் சேவா சங்கம் போராட்டங்களை திட்டமிட்டு நடத்துவதற்கு துவங்கப்பட்டிருந்தது.
        1924ல் ஆர் பி மோரே, மகத் தாலுகாவில் தேர்வு செய்யப்பட்ட தலித் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.’அவணர்களின் மாநாடு’’ என்ற தலைப்பில் மார்ச் 19-20, 1927 ல் நடத்துவதெனவும்  அம்பேத்கரை தலைமையேற்று நடத்திட அழைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
     1926 டிசம்பர் மாதம் க்ராபோர்டு குளச் சத்தியாகிரகம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், மக்களிடையே கொங்கன் மண்டலத்தில் அடிப்படை மனித உரிமைக்கான சரியான திட்டமிட்ட போராட்டம் வென்றுகாட்டும் என்ற நம்பிக்கையை உருவாகியிருந்தது.
        ஆர் பி மோரே மற்றும்அவரது நண்பர்கள் கொங்கன் மண்டலத்தில் பல கிராமங்களில் தீவிரமான பொதுக் கூட்டங்களை நடத்தினர். இந்தப் பின்னணியில் 1927 மார்ச் 19-20 தேதிகளில் மகத் மாநாடு மும்பை, ரத்னகிரி,குலாலா, தானே ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர்
        பிரதான ஒருங்கிணைப்பாளரான ஆர் பி மோரே, டாக்டர் பி ஆர் அம்பேத்கரையும், ஆனந்தராவ் சித்ரே, பாபு சகஸ்ரபுத்தே, சீத்தாராம் ஷிவர்ட்டகர் ஆகியோரை மாநாட்டில் அறிமுகப் படுத்தினார்.  மார்ச் 19ல் டாக்டர் அம்பேத்கரின் கனல் தெரிக்கும் பேச்சு சமூகத்தில்   பல வகையான சமூக ஒடுக்குமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது பார்வையாளர்களின் மத்தியில் சிந்தனைத் தீப்பொறி வீசி சமூக ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தது.
        இரண்டாவது நாளான மார்ச் 20ல் ஆயரக்கணக்கான தீண்டப்படாதார் மக்கள் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத்தில் சவுதார் குளம் நோக்கிப் பேரணியாக சென்று பல நூற்றாண்டுகளாக தலித்துகளுக்கு பொதுக்குளத்தைப் பயன்படுத்த தடை செய்யப்பட்ட அநீதியை  குளத்தில் இறங்கி நீர் அருந்தி முறியடித்தனர். இந்த மாபெரும் இயக்கம் ஆதிக்க ஜாதி இந்துக்கள் மத்தியில் மோசமான எதிர்வினையை உருவாக்கியது. சவுதார் குளம் தீட்டுப்பட்டது என்றும், அடுத்து தீண்டப்படாதார் மக்கள் மகத்தில் விட்டல் கோயிலில்தான் அவர்களின் திட்டம் என்ற வதந்திகளைக் கிளப்பினர்.  இந்துக்களில் சாதிவெறிக் கூட்டம் மிகப் பெரிய அளவில் திரண்டு சத்யாகிரகத்தில் கலந்து கொண்டோரை தாக்கி கலவரங்களை உருவாக்கி, தலித் மக்களின் வீடுகளையும் கடைகளையும் துவம்சம் செய்தனர்.டாக்டர் அம்பேத்கர் தலைமையில் போராட்டக் குழுவினரின் தலையீட்டால் வன்முறை கட்டுக்குள் அடங்கியது. அரசு அதிகாரிகளுக்கும் புகார் செய்யப்பட்டது. ஜாதி இந்துக்களின் வன்முறை வெறியாட்டச் செய்தி அடுத்தநாள் நாடுமுழுவதும் பரவியது. டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நாடுமுழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது.
      இந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர், தனது வாழ்நாள் முழவதையும் தீண்டத்தகாதாரின் விடுதலைக்கே அர்ப்பணிக்க உறுதிபூண்டார்.
பொது இடத்தில் மனுஸ்மிருதி கொளுத்தப் பட்டது;
      மகத் சத்யாகிரகப் போராட்ட நிகழ்வைத் தொடர்ந்து ஆர் பி மோரேயின் உதவியோடு ‘பகிஷ்கரித் பாரத்’ என்ற பருவ இதழைத் தொடங்க முடிவெடுத்தார். அனைத்துவிதமான முன்னேற்பாடுகளையும் செய்து ஏப்ரல்1 1927ல் அந்த இதழின் முதல் வெளியீடு வெளியிடப்பட்டது. இந்த இதழில் ஆர் பி மோரே, மகத் சத்தியாகிரகப் போராட்டம் குறித்து விரிவாக எழுதியிருந்தார். மேலும் வன்முறையை ஏவிவிட்ட சாதி இந்துக்களின் வன்முறைச் செயலைக் கண்டித்தும், சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் அறைகூவல் விடுத்தார்.
        ஆர் பி மோரே ‘டாக்டர் அம்பேத்கர் சேவா தள்’ என்ற பெயரில் மும்பையின் தலித் இளைஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கினார். காங்கிரசின் சேவாதள் அமைப்பைப் போன்று சமதா சைனிக் தள் அமைப்பை பெயர் மாற்றம் செய்து தீண்டப்படாதார் மக்களுக்கு பாதுகாப்புப் படை அமைத்து, அதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்கினார்..
தீரமிக்க தலித் இளைஞ்ர் படை கட்டப்பட்டு இரண்டாவது மகத் மாநாட்டை விரிவாக நடத்த திட்டமிட்டு 1927டிசம்பர் 25-26 தேதிகளில் மகாராஷ்டிரா முழுமைக்குமான தலித் ஆண்கள் பெண்கள் பங்கேற்ற வெற்றிகரமான மாநாடாக நடத்தி முடிக்கப்பட்டது.
        ஆனால் இந்த முறை நீதிமன்றம் தலித் மக்கள் சவுதார் குளத்தில் இறங்குவதை தடைசெய்து உத்தரவிட்டிருந்தது. ஆர் பி மோரே ,தாதாசாகேப் கெய்கவாட், இன்னும் பிறரும் நீதமன்ற ஆணையை மீறுமாறு அறிவுறுத்தினர். நீண்ட விவாதத்திதற்குப் பிறகு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுதிரண்டு மனுஸ்மிருதியை கொளுத்தினர். இது வர்ணாஸ்ரம சிந்தனையை மண்ணில் வேரூன்றச் செய்த மனுஸ்மிருதியை எரிக்கச் செய்தது வரலாற்றுப் பெருமை கொண்ட நிகழ்ச்சியாகும்.,
     தீண்டப்படாதார் பெண்களின் சிறப்பு மாநாடாக ஒருங்கிணைத்து,அதில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர், மாறிவரும் காலத்திற்கு ஒத்துவராத, பெண்களை அடிமைப் படுத்தும் அத்தனை சமூகப் பழக்க வழக்கங்களை தூக்கியெறியும்படி பெண்ணினத்திற்கு அறைகூவல் விடுத்தார்.
      இந்த இரண்டு வரலாற்றுப் பூர்வ மகத் மாநாடும் சத்தியாகிரகமும் டாக்டர் அம்பேத்கரின் சுயேச்சையான சமூக நீதிக்கான போராட்டமாக முன்னெடுத்தது. இந்த இரு இயக்கங்களின் வெற்றிக்கு அடித்தளமாகவும், பிரதான ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கியவர் ஆர் பி மோரே.
     இந்த இரண்டு இயக்கங்களால் உத்வேகம் பெற்ற தலித் மக்கள் பின்வரும் காலங்களில் ஏராளமான கிராமங்களில் பொதுக் கிணறுகளில், பொதுக் குளங்களில், பொது ஏரிகளில் நீர் எடுக்கும் உரிமைக்காக சத்தியாகிரகங்கள் நடத்தினர். இத்தகைய போராட்டங்கள்தான் வரலாற்றில் தடம்பதித்த  1932ல்  நாசிக்கில் காலாராம் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதற்கு எழுச்சியை ஊட்டியது.
     தலித் இயக்கத்தின் பலம்வாய்ந்த முன்னோடித் தலைவரான  கர்மவீர் தாதாசாகேப் கெயிக்வாட், அதுபோலவே பி என் ராஜபோஜ், சிவராம் காம்ப்ளே,இன்னும் பிறரால் தலைமையேற்று பூனேயில் நடத்தப்பட்ட பார்வதி சத்தியாகிரமும் மகத் சத்தியாகிரகம் கொடுத்த உத்வேகம்தான்.
பொதுவுடைமைக் கட்சியில் ஆர் பி மோமரே
      மகத் சத்தியாகிரகத்திற்குப் பிறகு ஆர் பி மோரேயிக்கு 1928-29ல் மும்பை பஞ்சாலையில் நடைபெற்ற உழைக்கும் வர்க்க இயக்கத்தினரோடு தொடர்பு உருவானது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிய கிர்னி காம்கர் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பஞ்சாலை முதலாளிகளின் சுரண்டலுக்கெதிராகவும், ஆங்கிலேய அரசுக்கெதிராகவும் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தார்.
          அதே சமயத்தில் கொங்கன் மண்டலத்தில் நிலவிய கோட்டி முறைக்கு எதிராகவும், ஜமீன்தாரி முறையின் கொடுமைக்கெதிராகவும் நடைபெற்ற விவசாயப் போராட்டத்திலும் பங்குபெற்றார். இந்த வர்க்கப் போராட்டங்களில் முழு ஈடுபாட்டோடு  கலந்து கொண்டதன் மூலமாக ஆர் பி மோரேயிக்கு மார்க்ஸியத் தத்துவார்த்த சிந்தனை மெருகேறியது. மார்க்ஸிய இயக்கத்தின் முன்னோடிகளான தோழர்கள் பி டி ரணதிவே, எஸ் வி தேஷ்பாண்டே ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தது ஒருபுறம், புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனந்த்ராவ் சித்ரே, ஷாம்ராவ் பருலேகர் ஆகியோரிடமும் நட்பு கிடைத்தது இன்னொரு புறம்.  ஆர் பி மோரே தனது மனதில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொருளாதார, சமூக அரசியல் பண்பாட்டு விடுதலை மார்க்ஸியத்தால் முடியும் என கருதினார்.
      டாக்டர் அம்பேத்கரிடம் நீண்ட தத்துவார்த்த விவாதத்திற்குப் பிறகு ஆர் பி மோரே 1930ல் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். டாக்டர் அம்பேத்கரின் நேர்மை, நம்பகத்தன்மை, காத்திரமான மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றின்மீது வைத்திருந்த ஆழமான மதிப்பையும்  மரியாதையையும் ஒருபோதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்தார்..
        ஆர்  பி மோரே 1930-32 காலகட்டத்தில் கொங்கன் மண்டலத்தில் சிறு விவசாயிகள் சங்கமான குலாபா மாவட்ட ஷெட்காரி சங்க அமைப்பின் முதலாவது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் தலைவராக இருந்தவர் பி ஜி கெர் அவர் பின்னாளில் பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சராக ஆனார். சிறுவிவசாயிகளின் ஷெட்காரி சங்கம் தலைமையேற்று நடத்திய போராட்டத்தால் ஆங்கிலேய சர்க்கார் அதை தடை செய்ததோடு, ஆர் பி மோரே மற்றும் தலைவர்களை கைது செய்து சிறையிலடைத்துவிட்டனர். சிறைப்படுத்திய செய்தி கேட்டு ஐம்பது வயதான ஆர் பி மோரேயின் தாயார் இறந்துபோன துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
  கட்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராக
   ஆர் பி மோரை  ஆசிரியராகக் கொண்டு   மும்பையில் ‘ஆவ்கன்’என்ற வாராந்திர ஏடு 1930 அக்டோபரில் துவக்கப்பட்டது. இவ்வார இதழின் தலையங்கம் மிக முக்கியாமான தத்துவங்களையும் அவ்வப்போதுள்ள நாட்டு நடப்புகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. உழைப்பாளிகளை சிறு விவசாயிகளை விழிப்புணர்வு படுத்துவதாகவும், சாதி, வர்ணம், மதம், தேசியப் பிரிவினை எப்படி உழைப்பாளிகளையும்  சிறு விவசாயிகளையும் வர்க்க ஒற்றுமை அடிபடையில் ஒன்றுசேர விடாமல் பிளவுபடுத்தி அழிக்கிறது என்பதை எடுத்து சொல்வதாகவும் அமைந்திருந்தது.
 ஆவ்கன் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிக்கைக்கு ஆங்கிலேய அரசின் தடை  
         ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தாக்கியும் உழைப்பாளி மக்களின் போராட்டங்களை ஆதரித்தும், சிறுவிவசாயிகள் மற்றும் தலித் ஒற்றுமையை வளர்த்திடவும் கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. வாரம் 2000பிரதிகள் விற்பனை ஆனது. ஒரு வருடம் முடிந்ததும் 1931ல் ஆங்கிலேய அரசு அப்பத்திரிக்கையை தடை செய்துவிட்டது.
 தொடர்ந்த கருத்து விவாதமும் பகிர்வும் தோழமையின் அழகு    
 ஆர் பி மோரே கட்சியில் இணைத்துக் கொண்டபிறகும் அம்பேத்கரோடு கொண்ட நட்பும், மரியாதையும் மதிப்பும் எவ்வித இடைவெளி இல்லாமல் தொடர்ந்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டுடன் டாக்டர் அம்பேத்கருடன் தொடர்ந்து கருத்து விவாதமும் பகிர்வும் நடத்தியது தோழமையின் புரட்சிகர அழகாகும். டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பதை ஆர் பி மோரே கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடத்துகின்ற வர்க்கப் போராட்டத்திற்கு துணைசெய்வதாகவே பெருமையோடு கருதினார். 1930ல் டாக்டர் அம்பேத்கர் லண்டனுக்கு வட்டமேஜை மாநாட்டிற்கு செல்லும்போது மகர் சமாஜ் சேவா சங்கம் சார்பில் ஆர் பி மோரே மும்பையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தி பெருமைப் படுத்தினார்.
       1933ல் இளைஞர்கள் பண்பாட்டுக் குழுவான நண்பர்கள் சங்கம் அமைத்து அதன் பதாகையில் ஆர் பி மோரே  டாக்டர் அம்பேத்கருக்கு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார். 1932 நாசிக்கில் காலாராம் ஆலய நுழைவு சத்தியாகரகத்திற்கு ஆர் பி மோரே மும்பையில் உழைக்கும் மக்கள் வசிக்கும் பல இடங்களில் ஆதரவுக் கூட்டங்களை நடத்தினார். நிதி திரட்டுவதிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதிலும் முன்னணியில் இருந்தார்.
 தேர்தலில் தன் கட்சியின் வேட்பாளராக கோரிக்கை விடும் நம்பிக்கை-நட்பு  
      1937, 1946 தேர்தல்களில் மும்பை மாகாணத்தில் அம்பேத்கர் கட்சியான சுதந்திரத்தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக நிற்கும்படி ஆர் பி மோரேயை டாக்டர் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆர் பி மோர் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினராதலால் மிகவும் நட்போடும் சாந்தமாகவும் டாக்டர் அம்பேத்கரின் வேண்டுகோலை மறுத்துவிட்டார்.
கம்யூனிஸ்ட் என்று தெரிந்திருந்தும் இதழ்களில் பங்களிக்க வேண்டுதல்
        டாக்டர் அம்பேத்கர் நடத்திய ஏடுகளான’ பகிஷ்கரித் பாரத்’ சமதா ஜனதா ஆகியவைகளில் ஆர் பி மோரே தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். ஜனதா ஏட்டின் ஆசிரியர் குழுவில் ஆர் பி மோரை அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று தெரிந்திருந்தும் இணைத்து அவரின் பங்களிப்பை பெற்றுக்கொண்டார். இந்தச் செயல்பாடுகளெல்லாம் டாக்டர் அம்பேத்கர் ஆர் பி மோரேயின் மீதும் அவர் கொண்ட தத்துவத்தின்மீதும் உள்ளத்தில் குறிப்பிடத் தகுந்த நம்பி வைத்திருந்தார் என்பதைக் காட்டியது.
புத்தம் தழுவியதை வரவேற்றார் ஆர் பி மோரே
     பௌத்த தத்துவத்தின் மீட்சியால் இயங்கியல் பொருள்முதல்வாத சிந்தனையைக் கொண்டிருக்கும் முற்போக்கு சக்திகளுக்கு வலு சேர்த்தது. அதன் விளைவாக மக்கள் விரோத பிற்போக்கு கருத்தாளர்களுக்கு மரணஅடியைக் கொடுத்தது என்ற அடிப்படையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் புத்தம் தழுவிய இயக்கத்தை ஆர் பி மோரே வரவேற்றார்.
  அம்பேத்கரின் மறைவால் சொல்லொண்ணா கலக்கம்
   டாக்டர் அம்பேத்கரின் மறைவு ஆர் பி மோரேயின் மனது பெரிது பாதிப்புக்கு உள்ளானது. மனம் பதை பதைத்து மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்று அம்பேத்கரின் உடலைப் பெறுவதற்கு காத்திருந்தவர்களோடு இவரும் ஒருவராகப் பங்கேற்றார்.
உழைப்பாளர் சிறுவிவசாயிகளின் போராட்டத் தலைவராக
      உழைப்பாளர்களின சிறுவிவசாயிகளின் பல போராட்டங்களுக்குத் தலைமை வகித்ததின் விளைவாக 1936ல் மகாராஷ்டிராவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொண்ட மிகச்சில தோழர்களில் ஆர் பி மோரேயும் ஒருவராகத் திகழ்ந்தார்.   
   1938ல் டாக்டர் அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சியின் பதாகையின்கீழ் கொங்கன் மண்டலத்தில் கோட்டி முறையை எதிர்த்து ஷாம்ராவ் பருலேகர் ஒருங்கிணைப்பில் சிறுவிவசாயிகளை திரட்டி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆர் பி மோரே கம்யூனிஸ்ட் தலைவர்களை பங்கேற்க வைக்க பெரிதும் முன்கையெடுத்தார்.(1939ல் சாம்ராவ் பருலேகர் கோதாவரி பருலேகர் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள்)
     1938ல் மறுபடியும் தொழிற்சங்க போராட்டத்திற்கெதிராக காங்கிரஸ் பம்பாய் மாகாண அரசின் மந்திரிசபை  கருப்பு மசோதா கொண்டுவந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியும், டாக்டர் அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சியும் ஒன்றுபட்டு போராடி முறியடித்து தொழிலாளர் உரிமையை வென்று காட்டினார்கள்.இந்த இணைப்பு முயற்சிக்கு பி ஆர் மோரேயின் பங்கு மகத்தானது.ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி நடந்த தினமான நவம்பர்7 அன்று பெருமைக்குரிய ஆண்டுவிழா சமயத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சியும் ஒன்றிணைந்து போராடியது உழைக்கும் வர்க்க ஒற்றுமை வரலாற்றில் கண்டிராத ஒன்றாக அமைந்தது.
     ரயில்வே தொழிலாளர் இயக்கத்திலும் துடிப்போடு செயல்பட்டார். மத்திய ரயில்வே ஊழியர்கள் சங்கத்தில் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1942 முதல் 1946 வரை சஃபை மஸ்தூர் சங்கம் (துப்புறவுப் பணியாளர் சங்கம்) , கடைநிலை  ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றை மும்பையில் ஒருங்கிணைத்து கட்டுவதில் தலைமைப் பாத்திரம் வகித்தார் ஆர் பி மோரே. மேற்குறிப்பிட்ட சங்கங்களின் மாநாடுகள் நாக்பூர், ஜான்ஸி பிஜப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராக ஆர் பி மோரே  தொடர்ச்சியாக  அழைக்கப்பட்டார். தீண்டாமைக் கொடுமைகளை, சாதியப் பாகுபாடுகளை ஊழியர்கள் சந்திக்கும்போதும், அவற்றுக்கெதிரான போராட்டங்களுக்கும் ஆர் பி மோரே  பங்குகொண்டார்
  சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டில் தீண்டத்தகாதாரின்-தொழிலாளர்களின் முதல் குரலாக 
  1945ல் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான என் எம் ஜோஷியுடன் பாரிசில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மாநாட்டில் ஆர் பி மோரே கலந்து கொண்டார். அப்போது ஆங்கிலேய மந்திரிசபையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் பெரும் முயற்சியால்தான் ஆர் பி மோரே கலந்து கொள்ள முடிந்தது. அந்த மாநாட்டில் தொழிலாளர் வர்க்கம் பரிதாபகரமான நிலைமையில் இருக்கின்ற பொதுவான அம்சங்களையும், ஊழியர்கள் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாகி வருகிறார்கள் என்ற குறிப்பான பிரச்னையையும் விளக்கினார். தீண்டத்தகாதார் ஊழியர்களுக்கு பஞ்சாலைகளில் சில துறைகளில் தீண்டாமை கருதியே பணி வழங்காமல் அநீதியாக விலக்கிவைக்கப்படுதலையும், வேறு தொழிற்சாலைகளில் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படும் நிலையையும் விளக்கிப் பேசினார்.
    சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் தீண்டத்தகாதாருக்கென்று  குறிப்பிட்ட விகிதாச்சார அளவு பணிகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்தவேண்டும் (அரசியல் சட்டத்தால் இட ஒதுக்கீடு உருவாக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை)என்றும் , தலித் ஊழியர்களுக்கெதிரான அனைத்துவகையான பாகுபாடுகளை தடுத்துநிறுத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளாக ஆர் பி மோரே எழுப்பினார். தீண்டாமைக்கெதிராகவும்,தலித்துகள்மீது ஏவப்படும் சமூக ஒடுக்குமுறைக்கெதிராகவும் மிக சக்தியோடு முதன்முறையாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் வினாக்களை எழுப்பினார் ஆர் பி மோரே. அவரின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் தலித் மக்களின் குரலை ஒலித்ததால்,அவரது பேச்சு சர்வதேச அளவில் அன்றைக்கிருந்த ஊடக உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா திரும்பியவுடன் இந்தியர் அனைவரும் பராட்டினர். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய பட்டியலின மக்களின் கூட்டமைப்பு சார்பிலும் பாராட்டப்பட்டதோடு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தனிப்பட்ட விதத்தில் வாழ்த்தி மகிழ்ந்தார்.  
சாதிய மற்றும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் எதிரி
     ஆர் பி மோரேயின் துணைவியரான சீதாபாய்,. அவரின் புதல்வர் சத்யேந்திர மோரே, அவரது மகள் கமல் உட்பட அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்புள்ள செயல்பாட்டாளர்கள்தான். புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் முப்பெரும் தலைவர்களான ஷாகிர் அமர் ஷைக், ஷாகிர் அன்னபாகுவா சாதே, ஷாகிர் டி என் கவஹாங்கர் ஆகியோரடங்கிய கலாச்சார அணியினருடன் இணைந்து அவ்வப்போது சமூகமாற்றப் பணியில் பயணித்தார்கள்.. ஆர் பி மோரே கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும் கட்சிப் படியை வாங்கிக் கொண்டு அர்ப்பணித்த நிரந்தர முழுநேர ஊழியர்களில் முதன்மையானவர் ஆவார். சிறை வாழ்க்கையும் அனுபவித்ததோடு, ஒன்பது ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை அனுபவித்தவர். இவரின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையை 1943ல் மும்பையில் நடைபெற்ற முதல் கட்சிக் காங்கிரஸில் மோரே குடும்பம்’கம்யூனிஸ்ட் குடும்பம்’ என்று பாராட்டியது.   அமைப்புகளில் எப்போதும் சாதிய ஒடுக்குமுறை குறித்த கேளவியை எழுப்பிக் கொண்டே இருந்தார். 1953ல் மூன்றாம் கட்சிக் காங்கிரஸிற்கு முன்பு கட்சியின் தலைமைக் குழுவிற்கு சாதிமுறைகளையும் அதன் தீண்டாமை கொடுமைகளைப் பற்றி குறிப்பு எழுதி அனுப்பினார். கட்சியின் பொலிட்பீரோ மிக முக்கியமாகக் கணக்கில் எடுத்துகொண்டு கட்சியின் அனைத்து மாநிலக் குழுக்களுக்கும் தங்களின் தகவல்களையும் விமர்சனங்களையும் அனுப்புமாறு சுற்றறிக்கை விடுத்தது.
         மோரே 1957 மற்றும்1964 ஆண்டுகளில் கட்சித் தலைமைக்கு கட்சி நடத்தக் கூடிய வர்க்கப்போராட்டத்தோடு சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளையும் இணைத்து முன்னெடுக்கவேண்டும் என்றும் , டாக்டர் அம்பேத்கரின் சமூகநீதிக்கான போராட்ட சாதகமான பங்களிப்போடு சமன்பாடு செய்யவேண்டுமென திருத்திய வேண்டுகோளை அனுப்பினார். இந்த சமூகப் பிரச்னை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களான இ எம் எஸ் நம்பூதிரிபாட், பி டி ரணதிவே, எம் பசுவபுன்னையா, அஜய்கோஷ் ஆகியோருடன் தொடர்பு கொண்டு ஆரோக்கியமாக விவாதித்தார். ஆர் பி மோரேயின் கோட்பாடும் வேண்டுகோளும் சரியான நடைமுறைக்கு வந்தது.
        மாநில அளவில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைமையில் கர்மவீர் தாதாசாகேப் கெய்க்வாட் தலைமையில் 1959, 1964 ஆண்டுகளில் நடைபெற்ற நிலமற்றோர் சத்தியாகிரகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான சாம்ராவ பருலேகர், கோதாவரி பருலேகர், க்ரந்திஸிமா நானா பட்டீல், ஆர் பி மோரே மற்றும் ஆயிரபக்கணக்கான சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறைப்படுத்தப்பட்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கொடியான செங்கொடியும். இந்திய குடியரசு கட்சியின் கொடியான நீலக் கொடியும் போராட்டக் களத்தில் ஒன்றாக இணைந்து பட்டொளி வீசிப் பறந்தன. இந்த போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு மிகப் பெருமளவில் சிறை நிரப்பியோர் நிலமற்ற தலித், நிலமற்ற சிறுவிவசாயக் கூலித் தொழிலாளர்களும்  மற்றும் ஆதிவாசி மக்களுமாவார்கள். 
      ஆர் பி மோரேயின் நேர்மையான, தன்னலமற்ற அர்ப்பணிப்புத் தன்மையால் கட்சித் தோழர்களாலும் மக்களாலும் ஒரே மாதிரி நேசிக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களோடு உயிரோட்டமான தொடர்பும், அவருடைய தத்துவார்த்தப் புரிதலாலும் மகாராஷ்டிரா முழுவதும் பரவியிருந்த பல தலித் செயல்பாட்டாளர்கள்ஆ கம்யூனிஸ்ட் கட்சி நோக்கி ஈர்க்கப்பட்டனர். நாசிக் காலாராம் ஆலயப் பிரவேச சத்தியாகிரகத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட கே எம் சால்வியும் அவர்களில் ஒருவர். பட்டியலினக் கூட்டமைப்பின் மும்பை கிளையின் செயலாளர் எஸ் பி ஜாதவ், சமதா சைனிக் தள் அமைப்பின் கேப்டன் சசலேகர் இன்னும் பிறரும் அடங்குவர். இவர்களனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிலைத்திருந்தனர். டாக்டர் அம்பேத்கர் மறைவிற்குப்பின்பு தொண்டர்கள் பலர் இந்தியக் குடியரசுக் கட்சியைவிட்டு விலகி காங்கிரசில் சேர்ந்த முரண்பாட்டுச் செயலும் நிகழ்ந்தது.
      ஆர் பி மோரே, கே எம் சால்வி ஆகியோர் கலை இலக்கிய பிரமுகர்கள் பலரை தங்கள்வசம் ஈர்த்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்தனர். அவர்களில்  தலித் சாகித்ய பாபுராவ ஷகிர் அன்னபாஹூ ஸ்தாபகரான பாகலின் சாத்தே, முற்போக்கு கவிஞரான ஷங்கர் ஷைலேந்திரா, ஷயார் மஜனு இன்டோரி, ஷகில் ரசூல் கடம் இன்னும் பலராவர்.
    1964ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது,  எவ்விதமான தயக்கமின்றி மார்க்ஸிஸ்ட் கட்சியோடு இணைந்தவர்களில் ஆர் பி மோரேயும் ஒருவர். இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
     1965ல்  கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகித்த பலரை காங்கிரஸ் மத்திய அரசு கைது செய்து சிறையிலடைத்தது. ஆர் பி மோரே ஜீவன்மார்க்  என்ற வாராந்திர இதழை ஏப்ரல் 14 ,1965ல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கி மகாராஷ்டிரா மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் வாராந்திர இதழாக இன்னும் தொடர்கிறது.
ஆர் பி மோரே அர்ப்பணித்த தியாக வாழ்வுக்கு புகழஞ்சலி
     புகழ்வாய்ந்த மார்க்ஸிஸ்ட் சிந்தனையாளர், எழுத்தாருமான ராகுல் சாங்கிருத்யாயன், முற்போக்கு எழுத்தாளர் ரமேஷ் சந்திர சின்ஹா, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆகியோரின் புகழஞ்சலி ஆர் பி மோரேதயை  என்றென்றும் பெருமைப் படுத்துவனவாக உள்ளன.
     1945ல் ராகுல் சாங்கிருத்யாயன் தான் எழுதிய ‘புதிய இந்தியாவின் புதிய தலைவர்கள்’ என்ற புத்தகத்தில் முசாபர் அகமது, பி சுந்தரய்யா,  இ எம் எஸ் நம்பூதிரிபாட், பி ஜி ஜோஷி, அஜய்கோஷ், கல்பனா தத், இன்னும் பிறரின் எழுச்சியூட்டும் விவரக் குறிப்புகளை குறிப்பிட்டிருப்பதோடு, ஆர் பி மோரே பற்றி மிகச் சிறப்பாக அழகுபட சுட்டிக் காட்டிப் பெருமைப் படுத்தியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் ரமேஷ் சந்திர சின்ஹா 1945ல் தான் எழுதிய கட்டுரையில் ஆர் பி மோரே’ இந்தியப் பாட்டாளி மக்களின் படைத்தலைவனாக அர்ப்பணித்தவர்’ எனக்குறிப்பிட்டு பெருமைப் படுத்தியிருக்கிறார். ட்டடா கல்கர் எழுதிய ‘ஆத்மஷோத்’ எனும் புத்தகத்தில் ஆர் பி மோரேயை டாக்டர் அம்பேத்கர் அறிமுகப் படுத்திய ஒரு சம்பவத்தை பதிவு செய்துள்ளார். ‘ ஆர் பி மோரே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, அம்பேத்கர் வைஸ்ராய் கமிட்டியில் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்தபோது, மும்பையில் மிக்ப்பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவராக பாதையோரத்தில் ஆர் பி மோரே நின்றுகொண்டிருப்பதைக் கவனித்த அம்பேத்கர் அவரை ஒலிபெருக்கியில் மேடைக்கு வருமாறு அழைத்தார். மோரே வர மறுத்து தயக்கம் காட்டினார். உடனே அம்பேத்கர் தனது தொண்டர்களிடம் ஆர் பி மோரேயை தூக்கி மேடைக்குக் கொண்டுவரும்படி ஆணையிட, மோரே விலகிப் போக வேறு வழியின்றி மேடைக்கு கொண்டுவரப்பட்டார். ஆர் பி மேடையை அடைந்ததும் அம்பேத்கர் ‘ இவர் ஆர் பி மோரே மிக உயர்ந்த மனிதர். என்னை அரசியல் களத்தில் நுழைக்க முயற்சி எடுத்த சிலரில் இந்த ஆர் பி மோரேயும் ஒருவர்’ என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தி பெருமைப் படுத்திய அற்புத நிகழ்வதான் அது.     
         அனைவரும் போற்றுதலுக்குரிய வகையில் தனது வாழ்க்கையையே சமூகநீதியைக் காத்திடவும், வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவ சமூகம் அடைவதற்கு போராட்டத்திற்கு அர்ப்பணித்த ஆர்  மோரே மும்பையில் 1972ல் மே மாதம் 11 அன்று பூமியில் சமத்துவப் போராட்ட விதையாக விதைக்கப் பட்டார். இந்தியக் குடியரசுக்கட்சியின் தலைவரும் டாக்டர் அம்பேத்கரின் புதல்வருமான பைய்யாசாகேப் அம்பேத்கர் தலைமையில் இறுதி பெருந்திரள் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் பி டி ரணதிவே ஆர் பி மோரேயின் வாழ்வும் பணியும் பற்றி பாராட்டி உரை நிகழ்த்தினார். தோழர் ஆர் பி மோரே தலித் இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒர் சக்திவாய்ந்த இணைப்புச் சங்கிலி’ எனும் தலைப்பில் மராத்தி மொழியில் ஆர் பி மோரேயின் புதல்வர் சத்தியேந்திர மோரே எழுதிய நூலை, மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் அறிமுகத்தோடு அவரின் நூறாண்டு பிறந்த வருடத்தில் வெளியிட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

கேரளாவின் முதல் சமூக சமத்துவப் போராளி அய்யன்காளி